May 31, 2023

ஜெய்யின் முழு ஒத்துழைப்பினால்தான் ‘ஜருகண்டி’ படம் சீக்கிரமாக தயாராகியுள்ளதாம்..!

ஜெய்யின் முழு ஒத்துழைப்பினால்தான் ‘ஜருகண்டி’ படம் சீக்கிரமாக தயாராகியுள்ளதாம்..!

நடிகர் நிதின் சத்யா தற்போது தயாரிப்பாளராகவும் மாறியிருக்கிறார். இவருடைய தயாரிப்பில் உருவாகியிருக்கும் முதல் திரைப்படம் ‘ஜருகண்டி’.

இத்திரைப்படத்தில் நிதின் சத்யாவின் மிக நெருங்கிய நண்பரான ஜெய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

‘ஜெகோபிண்டே சொர்க்க ராஜ்ஜியம்’ என்கிற மலையால திரைப்படத்தில் நாயகியாக நடித்த ரெபா மோனிகா, இந்தப் படத்திலும் நாயகியாக நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் மூலம் இயக்குநர் வெங்கட் பிரபுவின் முன்னாள் இணை இயக்குநரான பிச்சுமணி, இயக்குநராக தமிழ்ச் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகிறார்.

ஆக்‌ஷன் மற்றும் பொழுது போக்கு படமான இந்த படத்தில் தான் மட்டும் வசதி, வாய்ப்புடன் வாழ, போலி ஆவணங்களை வைத்து நிதி நிறுவனத்தில் கடன் வாங்குபவராக நடித்திருக்கிறார் ஜெய்.

ஜெய் மற்றும் நிதின் சத்யா ஆகியோர் நட்பினால்தான் இத்திரைப்படம் உருவாகியிருக்கிறது.

jarukandi movie stills 

இது பற்றி தயாரிப்பாளரும், நடிகருமான நிதின் சத்யா பேசுகையில், “எங்கள் நட்பிற்காக இதை நான் சொல்லவில்லை, உண்மையிலேயே  ஜெய்யின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பு மொத்த படப்பிடிப்பிலும்  இருந்தது. சொன்ன நேரத்துக்கு 30 நிமிடங்களுக்கு முன்னரே படப்பிடிப்புக்கு வரும் ஜெய், அவரது காட்சிகள் எடுத்து முடித்த பின்னரும் அங்கேயே இருப்பார்.

மேலும் அவரது சகோதரர் போபோ சசிதான் இந்த படத்தின் இசையமைப்பாளர். பாடல் காம்போஸிங்கின்போதும் கூடவே இருந்தார் ஜெய். ஜெய், மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களின் முழு ஒத்துழைப்பால்தான் ‘ஜருகண்டி’ படத்தை 46 நாட்களில் எடுத்து முடிக்க முடிந்தது…” என சந்தோஷமாக கூறினார்.

நடிகராக இருந்து திடீரென்று தயாரிப்பாளராக ஆன  காரணத்தை பற்றி நிதின் சத்யா கூறும்போது, “நான் நடிக்க ஆரம்பித்ததிலிருந்தே திரைப்பட தயாரிப்பிலும் எனக்கு ஒரு மயக்கமான ஆர்வம் இருந்தது. அதை பற்றிய நுணுக்கங்களை தெரிந்து கொள்ள நான் நடிக்கும் படங்களில் தயாரிப்பு பக்கத்திலும் அவ்வப்போது எட்டி பார்ப்பேன்.

எனக்குள் இந்த விருப்பம் படிப்படியாக வளர்ந்து, ஒரு கட்டத்தில் தயாரிப்பில் இறங்க.. முயற்சி செய்து பார்க்க… இதுதான் சரியான நேரம் என உணர்ந்தேன். இந்த முயற்சியில் என்னோடு இணைந்த இணை தயாரிப்பாளர் பத்ரி கஸ்தூரிக்கு எனது நன்றி. பத்ரி இந்த படத்தில் எனக்கு வழங்கிய ஆதரவு அசாதாரணமானது. அவரால்தான் நான் தயாரிப்பாளரானேன்..” என்கிறார் நன்றியுடன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *