இயக்குநர் சுசீந்திரன் இயக்கிவரும் ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் முதல் அறிமுக விழா நேற்று மதியம் வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது
இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகனான ரோஷன், ஒளிப்பதிவாளர் குருதேவ், படத் தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குனர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குநர்கள் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் இயக்குநர் சுசீந்திரன் பேசும்போது, “ஹிந்தியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘PK’ திரைப்படத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் படத்தின் பாதிப்பில்தான் நான் இப்படத்தை இயக்கியுள்ளேன். இப்படம் ‘PK’ போலவே மக்களுக்கு கருத்து சொல்லும் அதே நேரத்தில் ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும்.
நான் இந்த ‘ஜீனியஸ்’ திரைப்படத்தின் கதையை முதலில் யோசித்தபோது அது கதையாக இல்லை. கருவாக மட்டும்தான் இருந்தது. நான் இந்த கதையையும், கதாபாத்திரத்தை பற்றியும் பலரிடம் ஒன் லைனாக கூறியுள்ளேன். அனைவருக்கும் அது மிகவும் பிடித்திருந்தது. இதை எப்படி கதையாக மாற்றுவது என்று பல வருடங்களாக யோசித்து வந்தேன்.
அது கதையாக மாறிய பின்பு விஜய், அல்லு அர்ஜுன், ஜெயம் ரவி உள்ளிட்ட பலரிடம் கூறியுள்ளேன். அனைவருக்கும் இந்த கதை மிகவும் பிடித்திருந்தது ஆனால் அவர்களால் சில காரணங்களால் நடிக்க முடியவில்லை. கடைசியாக இந்த கதை அறிமுக நாயகன் மற்றும் புதிய தயாரிப்பாளரான ரோஷனிடம் சென்று தற்போது ‘ஜீனியஸ்’ படமாக வந்துள்ளது.
இப்படத்தின் கதை அனைத்து மொழி மக்களுக்கும் பிடிக்கும் வகையில் உள்ளதால் படத்தை ஹிந்தி மற்றும் தெலுங்குவில் வெளியிட முடிவு செய்துள்ளோம். ரோஷனை இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும், ஹீரோவாகவும் அறிமுகம் செய்வதில் எனக்கு பெரும் மகிழ்ச்சி…” என்றார் இயக்குநர் சுசீந்திரன்.
நாயகன் ரோஷன் பேசும்போது, “நான் சில வருடங்களுக்கு முன்னால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்றுதான் சென்னைக்கு வந்தேன். ஒரு படத்தில் நானும் என்னுடைய நண்பனும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அதன் பின்னர் சினிமா வேண்டாம் என்று முடிவு செய்து சொந்த தொழிலை பார்க்க சென்றுவிட்டேன். காரணம் வீட்டில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறி வந்தார்கள். அதன் பின்னர் சினிமா ஆசை இல்லாமல்தான் இருந்தேன்.
கல்யாணத்துக்கு பின்னர் என்னுடைய மனைவி இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்னர் ‘நீங்கள் ஏன் சினிமாவில் நடிக்கும் ஆசையை கைவிட்டுவிட்டீர்கள்?’ என்று கேட்டார். அப்போது தொடங்கிய விஷயம்தான் இன்று சுசீந்தரன் சாரின் இயக்கத்தில் இந்த ‘ஜீனியஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளேன். படம் நன்றாக வந்துள்ளது.
நான் தயாரிப்பாளர் மற்றும் நடிகரானதும் என்னுடைய நண்பன் என்னுடைய பிஸினஸையும், குடும்பத்தையும் பார்த்துக் கொண்டார். அவர்தான் எனக்கு மிகப் பெரிய பலம். அதன் பின்னர் எனக்காக சினிமாவை கற்றுக் கொண்ட என்னுடைய நண்பன் என்று நண்பர்கள் பலரின் உதவியால்தான் நான் இன்று இங்கு உள்ளேன்.
‘ஜீனியஸ்’ போன்ற நல்ல படைப்பின் மூலமாக என்னை தமிழ் சினிமாவுக்கும், மக்களுக்கும் அறிமுகம் செய்த இயக்குநர் சுசீந்திரனுக்கு நன்றி…” என்றார் தயாரிப்பாளர் மற்றும் நடிகரான ரோஷன்.