நடிகர் கமல்ஹாசன் நடித்து, இயக்கியுள்ள ‘விஸ்வரூபம் 2′ படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
தமிழ் பதிப்பின் டிரெயிலரை நடிகை ஸ்ருதிஹாசனும், தெலுங்கில் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் அமீர்கானும் வெளியிட்டனர்.
ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பிறகு படம் குறித்து பேசுவதற்காக தனது எல்டாம்ஸ் சாலை அலுவலகத்தில் செய்தியாளர்களை நடிகர் கமல்ஹாசன் சந்தித்தார்.
அப்போது அவர் பேசும்போது, “இந்த ‘விஸ்வரூபம்-2’ திரைப்படம் தாமதமானதற்கு ராஜ்கமல் நிறுவனம் காரணமல்ல. முதல் பாகத்தை உருவாக்கியபோது எந்த மாதிரியெல்லாம் பிரச்னைகள் இருந்தனவோ அதேபோல சில பிரச்னைகள் இந்த முறையும் இருந்தன.
அதேபோன்று முதல் பாகத்தை படத்தை வெளியிடுவதற்கு முன்னரே திரையிட்டுக் காட்ட வேண்டிய வற்புறுத்தலுக்கு ஆளானேன். இப்போது அந்த மாதிரியான வற்புறுத்தல்கள் எதுவும் இருக்காது என்றே நம்புகிறேன். ஒருவேளை பட வெளியீட்டில் ஏதாவது பிரச்னை என்றாலும் அதை நிச்சயம் தைரியமாக எதிர்கொள்வேன்.
இந்தப் படத்தில் நாசர், சேகர் கபூர், பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்ட நடிகர், நடிகைகளுடைய பங்களிப்பு பெரிதும் பயனுள்ளதாக இருந்தது. இசையமைப்பாளர் ஜிப்ரான் மிகுந்த கவனத்தை ஏற்படுத்துவார்.
முதல் பாகத்தைப் போல இந்த பாகத்திலும் சிறந்த ஆடை வடிமைப்பை கௌதமி கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்.
நீண்ட காத்திருப்பாக இருந்தாலும் இத்திரைப்படம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைவைத் தரும் என்றே நம்புகிறேன். ‘இந்தியன்-2’, ‘சபாஷ் நாயுடு’ படங்களைப் பற்றி இப்போது எதுவும் கூற முடியாது…” என்றார் கமல்ஹாசன்.