தற்போது ‘சண்டக் கோழி’ படக் குழுவினருக்கு தங்க மழை பொழிந்து கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்புதான் படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது அந்தப் படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷ், படக் குழுவினர் அனைவருக்கும் ஒரு கிராம் தங்க நாணயத்தை வழங்கினார்.
அதை தொடர்ந்து தற்போது படக் குழுவினர் 150 பேருக்கும் நாயகன் விஷால் மற்றும் இயக்குநர் லிங்குசாமி இருவரும் ஆளுக்கு ஒரு தங்க நாணயத்தை பரிசாக வழங்கியதுடன் அனைவருக்கும் விருந்தளித்து கெளரவப்படுத்தியுள்ளனர்.
நாயகன் மற்றும் இயக்குநர் ஆகியோர் தனித்தனியாக தங்க நாணயம் வழங்கியது ‘சண்டக் கோழி-2’ படக் குழுவினருக்கு பெரும் சந்தோஷத்தை தந்துள்ளது.
கூடுதலாக இயக்குநர் லிங்குசாமி மழையால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு ருபாய் இரண்டு லட்சத்தை முதலமைச்சர் நிவாரண நிதியின் மூலம் வழங்கியுள்ளார்.
வரும் அக்டோபர் 18-ம் தேதியன்று தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கும் ‘சண்டக் கோழி-2′ திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
விஷால் பிலிம் பேக்டரியின் தயாரிப்பில், யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் பாடல், சில நாட்களுக்கு முன் வெளிவந்து மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.