*’நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C-ன் கூட்டு முயற்சி!*

*மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய*

*’நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவை: சென்னை காவேரி மருத்துவமனை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C-ன் கூட்டு முயற்சி!*

*25 ஜூன் 2026, சென்னை:* மருத்துவச் சேவையில் தமிழ்நாட்டில் முன்னணி வகிக்கும் சென்னை காவேரி மருத்துவமனை, லயன்ஸ் கிளப் ஆஃப் சென்னை KVG அறக்கட்டளை மற்றும் லயன்ஸ் மாவட்டம் 3241C ஆகியவற்றுடன் இணைந்து, தனது சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ் ‘நடமாடும் மேமோகிராம்’ வாகனச் சேவையைத் தொடங்கியுள்ளது. மார்பகப் புற்றுநோயைக் கண்டறிவதற்கான வழக்கமான மேமோகிராம் பரிசோதனைகளைச் செய்ய, மருத்துவமனை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்வதில் சிரமப்படும் பெண்களுக்கு இப்பரிசோதனையை எளிதாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நடமாடும் வாகனத்தின் மூலம் பரிசோதனைச் சேவைகளை நேரடியாகப் பொதுமக்களின் வசிப்பிடத்திற்கே கொண்டு செல்வது, ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறியவும், மார்பக ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பெரிதும் உதவும்.

நவீன மேமோகிராம் சாதனம் பொருத்தப்பட்ட இந்த நடமாடும் மருத்துவ ஊர்தியை, தமிழ்நாடு அரசின் உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. ப. வெங்கடரமணன்அவர்கள் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம், மார்பகப் புற்றுக்கட்டிகளைக் கண்டறிவதற்கான டிஜிட்டல் மேமோகிராபி பரிசோதனையை மிகவும் வசதியாகவும் எளிதாகவும் வழங்கும் வசதிகளைக் கொண்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகள், பணியிடங்கள், சமுதாயக் கூடங்கள் மற்றும் புறநகர், நகர்ப்புறங்களின் பல்வேறு இடங்களுக்கு நேரடியாகச் சென்று இவ்வாகனம் சேவை வழங்கும். இது, பெண்கள் தங்களது ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும்.

மார்பகப் புற்றுநோய் கண்டறிதலுக்கான டிஜிட்டல் மேமோகிராபியுடன், இந்த நடமாடும் வாகனம் ‘பேப் ஸ்மியர்’ (Pap smear) மற்றும் ‘கோல்போஸ்கோபி’ (Colposcopy) பரிசோதனை வசதிகளையும் வழங்கும். இதனால், பெண்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் நோய் தடுப்புப் பரிசோதனைகளுக்கான ஒரே இடமாக (All-in-one wellness unit) இந்த வாகனம் செயல்படும். பேப் ஸ்மியர் பரிசோதனை, கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது அதற்கான ஆரம்பகட்ட மாறுபாடுகளைக் கண்டறிய உதவுகிறது. மேலும், கூடுதல் பரிசோதனை தேவைப்படும் பட்சத்தில் கோல்போஸ்கோபி மூலம் கர்ப்பப்பை வாய் பகுதியை மிக நெருக்கமாகப் பரிசோதிக்க முடியும். இந்த வாகனத்தில் காவேரி மருத்துவமனையின் பெண் மருத்துவர்கள் மற்றும் கதிரியக்க வல்லுநர்கள் (Radiologists) உடன் இருப்பார்கள். அவர்கள் பெண்களின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்து, தேவையான ஆலோசனைகளையும் அடுத்தகட்ட வழிகாட்டுதல்களையும் வழங்குவர்.

இந்தச் சேவையின் தொடக்க விழாவில் பேசிய லயன்ஸ் சர்வதேச அமைப்பின் 3241C மாவட்ட ஆளுநர், PMJF லயன் எஸ். போஸ், “தமிழ்நாட்டில் பெண்களைப் பாதிக்கும் பொதுவான புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் தொடர்ந்து முதன்மையாக உள்ளது. விழிப்புணர்வு இல்லாமை மற்றும் போதிய மருத்துவ வசதிகள் தங்களுக்கு அருகில் கிடைக்காத காரணத்தால், பல பெண்கள் சரியான நேரத்தில் இதற்கான பரிசோதனையைச் செய்துகொள்வதில்லை. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்கள், புறநகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகிலேயே இப்பரிசோதனை வசதியைக் கொண்டு சேர்ப்பதே எங்களது நோக்கமாகும். தமிழ்நாட்டின் முன்னணி மருத்துவக் குழுமங்களில் ஒன்றான காவேரி மருத்துவமனையுடன் இணைந்து இந்த சமூக நலத் திட்டத்தில் பங்கேற்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

மார்பகப் புற்றுநோயின் பரவலான பாதிப்பு குறித்துப் பேசிய மூத்த புற்றுநோய் அறுவைசிகிச்சை மற்றும் ரோபோடிக் அறுவைசிகிச்சை நிபுணர் டாக்டர் சுஜய் சுசிகர், “மாநில புற்றுநோய் பதிவேட்டின் தரவுகள், பெண்களிடையே மார்பகப் புற்றுநோயே முதன்மையான பாதிப்பாக இருப்பதைக் காட்டுகின்றன. இது, சரியான நேரத்தில் பரிசோதனை செய்து, நோயை முன்கூட்டியே கண்டறிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகிறது. புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள நவீன மருத்துவ முன்னேற்றங்கள் காரணமாக, மார்பகப் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் முறையான சிகிச்சை மூலம் முழுமையாகக் குணப்படுத்த முடியும். ஆனால், பரிசோதனை வசதிகளை எளிதில் அணுக இயலாததாலும், விழிப்புணர்வின்மையாலும் பல பெண்கள் பரிசோதனையைத் தள்ளிப்போடுகின்றனர். இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் மூலம், பரிசோதனை வசதியை அவர்களின் வாழ்விடங்களுக்கே கொண்டு சென்று, பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, சரியான நேரத்தில் சிகிச்சை பெற்று நலம் பெற உதவுகிறோம்” என்றார்.

காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில், “இந்தத் திட்டம், அனைவருக்கும் எளிதாகக் கிடைக்கக்கூடிய, முன்கூட்டியே தற்காத்துக் கொள்ளக்கூடிய ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவதில் காவேரி மருத்துவமனைக்கு உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. இந்த நடமாடும் மேமோகிராம் வாகனம் என்பது வெறும் பரிசோதனை சேவை மட்டுமல்ல; இது பெண்கள் எதிர்கொள்ளும் தடைகளைக் குறைத்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி, தங்களின் ஆரோக்கியத்தை அவர்களே கவனித்துக் கொள்ள வழிவகுக்கும் ஒரு முக்கிய முன்னேற்ற நடவடிக்கையாகும். மருத்துவச் சேவைகளை மக்களிடமே நேரடியாகக் கொண்டு செல்வதன் மூலம், நோய் தடுப்புப் பராமரிப்பை அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாக மாற்ற முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த நற்பணிக்காக லயன்ஸ் சர்வதேச அமைப்புடன் இணைந்து செயல்படுவதில் மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

முன்கூட்டியே மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் வசதி குறைவாக உள்ள பகுதிகளைச் சென்றடைவதை நோக்கமாகக் கொண்டு, வரும் வாரங்களில் இந்த நடமாடும் வாகனம் மூலம் திட்டமிடப்பட்ட இலவசப் பரிசோதனை முகாம்களை காவேரி மருத்துவமனை நடத்தவுள்ளது.