காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு

காமெடி கிங்’ கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நட்சத்திர நடிகரான ‘காமெடி கிங்’ கவுண்டமணி கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னை கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் படத்தின் இசை மற்றும் முன்னோட்டத்தை தமிழ்த் திரையுலகின் முன்னணி பிரபலங்களான இயக்குநர் கே. பாக்யராஜ், இயக்குநர் பி. வாசு, தயாரிப்பாளர் கே. ராஜன், ஆகியோர் இணைந்து வெளியிட, படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இயக்குநர் சாய் ராஜகோபால் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் ‘காமெடி கிங்’ கவுண்டமணி, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கமுத்து, சித்ரா லட்சுமணன், ரவி மரியா, வையாபுரி, ஓ ஏ கே சுந்தர், கூல் சுரேஷ், டாக்டர் காயத்ரி, அனுமோகன், முத்துக்காளை, வாசன் கார்த்திக், அன்பு மயில்சாமி, கஜேஷ் நாகேஷ்,, ராஜேஸ்வரி, பிந்து, அபர்ணா, சாய் தன்யா, டெம்பிள் சிட்டி குமார், தாரணி, சென்ராயன், லேகா ஶ்ரீ, டி கே ஶ்ரீநிவாசன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சா. காத்தவராயன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை எஸ். பி. ராஜா சேதுபதி மேற்கொள்ள கலை இயக்கத்தை மகேஷ் நம்பி கவனித்திருக்கிறார். அரசியலும் காமெடியும் கலந்த இந்த திரைப்படத்தை சினி கிராஃப்ட் புரொடக்ஷன் நிறுவனம் மற்றும்  குட்டி ஸ்டோரி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எம். ஈ.  ரவி ராஜா மற்றும் கோவை லட்சுமி ராஜன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார். 

வரும் 14ம் தேதி காதலர் தினத்தன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் ஒளிப்பதிவாளர் சா. காத்தவராயன், கலை இயக்குநர் மகேஷ் நம்பி,  நடிகர்கள் அனு மோகன், ரவி மரியா, மதுரை குமார்,  ஓ எ கே சுந்தர், வையாபுரி, சிசர் மனோகர், சி என் ரங்கநாதன், கஜேஷ், பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன்,  இசையமைப்பாளர் சித்தார்த் விபின், ஃபைவ் ஸ்டார் செந்தில், தயாரிப்பாளர்கள் எஸ். கதிரேசன், கே. ராஜன், இயக்குநர்கள் பி. வாசு, கே. பாக்யராஜ் இவர்களுடன் ‘காமெடி கிங்’ கவுண்டமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

பாடலாசிரியர் மோகன் ராஜன் பேசுகையில், ”சந்தோஷமான தருணம் இது. கடந்த ஆண்டில் வெற்றி பெற்ற ‘லப்பர்பந்து’, ‘டிமான்டி காலனி 2’ ஆகிய படங்களில் பாடல் எழுதுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு நகைச்சுவை உலகின் சூப்பர் ஸ்டார், காமெடி கிங் கவுண்டமணி நடிக்கும் ‘ஒத்த ஒட்டு முத்தையா ‘ எனும் இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்கள் எழுதி இருக்கிறேன். இந்த வாய்ப்பிற்காக இசையமைப்பாளர் சித்தார்த் விபினுக்கும், இயக்குநர் ராஜகோபாலுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவரம் தெரியாத வயதிலேயே எனக்கு பிடித்த நபர் கவுண்டமணி. இந்த மேடையில் அவரும், பாக்கியராஜ் சாரும் ஒன்றாக இருப்பதை நான் பெருமிதமாக கருதுகிறேன். இந்தப் படம் கண்டிப்பாக பெரிய அளவில் வெற்றி பெறும். இதற்கு அனைவரும் ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார். 

படத்தின் இணை தயாரிப்பாளர் கோவை லட்சுமி ராஜன் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை.‌ ஒரே ஒரு விஷயத்தை மட்டும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். சூரிய உதயத்தில் கூட ஒரு நிமிடம் காலதாமதம் உண்டு. ஆனால் எங்கள் அண்ணன் கவுண்டமணி படபிடிப்பு தளத்திற்கு ஒரு நிமிடம் கூட தாமதமாக வர மாட்டார். சரியான தருணத்தில் வந்து விடுவார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார். 

நடிகை ஹீமா பிந்து பேசுகையில், ”என் வாழ்க்கையில் சந்தோஷமான நாள் இது. லெஜண்டரி ஆக்டர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்ததை பெரிய பாக்கியமாக கருதுகிறேன். இதற்கு கடவுளுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் என் நன்றி,” என்றார். 

நடிகர் ரவி மரியா பேசுகையில், ”ஆறு வருடங்களுக்கு முன் கவுண்டமணியுடன் இணைந்து நடிப்பது போல் கனவு கண்டேன். அந்தக் கனவு பலித்து விட்டது. படப்பிடிப்பு தளத்தில் அவர் எங்களுக்கு மரியாதை கொடுத்து பேசியது வியப்பை அளித்தது. படப்பிடிப்பு தளத்தில் அவருடன் இணைந்து நடிக்கும் போது தவறு ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக காட்சிக்கு முன்னர் ஒத்திகை பார்ப்பேன்.  அந்த ஒத்திகை தருணத்தில் கூட அவர் தனக்கான வசனங்களை எனக்காக பேசுவார்.  ஒரு கலைஞரின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறை அப்போது தெரிந்தது.  

இந்த தருணத்தில் இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன். அவர் இல்லை என்றால் கவுண்டமணி இல்லை. அவர் தான் கவுண்டமணியை பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்தினார்.

இயக்குநர் பி வாசுவிற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இயக்கத்தில் அண்மையில் ‘சந்திரமுகி 2 ‘ திரைப்படத்தில் நடித்தேன். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் எளிமையாக அனைவரிடத்திலும் பழகுவார்.  பி. வாசுவின் இயக்கத்தில் வெளியான ‘சின்னத்தம்பி’, ‘நடிகன்’, ‘வால்டர் வெற்றிவேல்’, ‘மலபார் போலீஸ்’ போன்ற படங்களில் கவுண்டமணியின் நடிப்பும், வசனமும் உயரத்தைத் தொட்டிருக்கும். கவுண்டமணியை அறிமுகப்படுத்தியவரும், கவுண்டமணியை உயரத்திற்கு அழைத்துச் சென்றவரும் ஒரே மேடையில் ஒன்றாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 

இயக்குநர் சாய் ராஜகோபால் நன்றாக திட்டமிட்டு, படத்தை திட்டமிட்ட நேரத்தில் நிறைவு செய்து கொடுத்திருக்கிறார். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ தமிழ்நாட்டில் உள்ள ஏழரை கோடி ஓட்டுகளையும் பெறும். இப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்,” என்றார். 

நடிகர் கஜேஷ் பேசுகையில், ”என்னுடைய தாத்தா நாகேஷ் உடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். என் அப்பா ஆனந்த் பாபுவுடனும் கவுண்டமணி சார் நடித்திருக்கிறார். கவுண்டமணியுடன் நானும் நடித்திருக்கிறேன். தொடர்ந்து மூன்று தலைமுறையாக அவருக்கும் எங்களுக்குமான நட்பும், உறவும் நீடிக்கிறது. படப்பிடிப்பு தளமும், படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களும் முழு மகிழ்ச்சியுடன் இருந்தது,” என்றார். 

நடிகை அபர்ணா பேசுகையில், ”சின்ன வயதில் கவுண்டமணி சாரின் காமெடியை பார்த்து ரசித்திருக்கிறேன். ஆனால் அவருடன் இணைந்து நடிப்பேன் என்று ஒருபோதும் கனவு காணவில்லை.  அந்தக் கனவை நனவாக்கிய இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ‘ஒத்த ஒட்டு முத்தையா’ படம் நன்றாக வந்திருக்கிறது. அனைவரும் பார்த்துவிட்டு ஆதரவு தாருங்கள்,” என்றார். 

இசையப்பாளர் சித்தார்த் விபின் பேசுகையில், ”இயக்குநர் என்னிடம் பேசும்போது, ஹீரோ கவுண்டமணி’ என்று சொன்னவுடன் வேறு எதையும் கேட்கவில்லை, நான் பணியாற்றுகிறேன் என்று சம்மதம் தெரிவித்தேன். சந்தானம், யோகி பாபு ஆகியோருடன் பணியாற்றி இருக்கிறேன். அவர்களுடன் இணைந்து பணியாற்றும்போது, ‘கவுண்டமணி தான் எங்களுடைய இன்ஸ்பிரேஷன்’ என சொல்ல கேட்டு இருக்கிறேன். அதனால்  கவுண்டமணி தான் ‘பஞ்ச் கிங்’ என்று சொல்வேன். 

இந்தப் படத்தில் பாடல்களை பாடலாசிரியர்கள் மோகன் ராஜன், சினேகன் ஆகியோர் நன்றாக எழுதி இருக்கிறார்கள். பாடல்கள் நன்றாக வந்திருக்கின்றன. படமும் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள். ஒரு காமெடி திரைப்படத்தை இயக்குவது எவ்வளவு கடினம் என்று எனக்குத் தெரியும். கதாசிரியராக மட்டுமில்லாமல் இந்தப் படத்தை சாய் ராஜகோபால் நன்றாக இயக்கியிருக்கிறார். பொதுவாக மக்களை சிரிக்க வைப்பது என்பது கடினமான காரியம். அதனை இயக்குநர் எளிதாக செய்திருக்கிறார். படம் அனைவருக்கும் பிடிக்கும். இந்த விழாவிற்கு வருகை இந்த அனைவருக்கும் நன்றி,” என்றார். 

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், ”இந்த மேடை எனக்கு முக்கியமான பதிவு. சின்ன வயதில் பள்ளிக்கூடத்திற்கு செல்லும் போது ஒட்டியிருக்கும் போஸ்டரில் ‘கவுண்டமணி- செந்தில்’ இடம் பிடித்திருப்பார்கள். உடனே என்னுடைய நண்பர்கள், ‘இந்த படத்திற்கு செல்லலாமா?’ என கேட்பார்கள். அந்தப் படத்தின் நாயகன் யார்,  நாயகி யார் என்பதெல்லாம் தெரியாது. கவுண்டமணி செந்தில் இவர்கள் இருக்கும் படத்திற்கு செல்லலாமா என கேட்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இதன் காரணத்தினாலேயே நான் இந்த மேடையில் நிற்பதை பெருமிதமாக கருதுகிறேன். 

கவுண்டமணி ஐயாவை பற்றி பேச வேண்டும் என்றால் மணி கணக்கில் பேசலாம். சினிமாவில் கதாநாயகர்களை நம்பி படம் எடுத்தார்களோ இல்லையோ, கவுண்டமணியை நம்பி படம் எடுத்த தயாரிப்பாளர்கள் நிறைய பேர். இன்றும் அவர்கள் அவருக்காக காத்திருக்கிறார்கள். 

மிகப்பெரிய நிகழ்வை கூட ஒரு சிறிய புன்னகை மூலம் கடந்து செல்லலாம் என்பதை உணர்த்தியவர் அவர்.  அகில உலக சர்வாதிகாரியான ஹிட்லரை ஒரு நகைச்சுவை நடிகரான சார்லி சாப்ளின் தான் ஒரு கேலியான சிரிப்பு மூலம் கடந்து போக வைத்தார். இந்தப் படத்தில் நானும் ஒரு அங்கமாக இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். 

இயக்குநர் ராஜகோபால் பத்து ஆண்டுக்கு முன் என்னை நாயகனாக வைத்து படம் எடுப்பதற்காக என்னிடம் கதை சொல்ல வந்தார். அன்றிலிருந்து அவருடனான என்னுடைய நட்பு தொடர்கிறது. அந்தத் தருணத்தில் அவரிடம் கவுண்டமணி பேசிய பஞ்ச் டயலாக்கை மட்டுமே வைத்து பாடல் எழுதலாமா என கேட்டேன். அவர் பேசிய பஞ்ச் டயலாக்கை மட்டுமே வைத்து 50க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதலாம் போலிருக்கிறது. அவ்வளவு பன்ச் டயலாக்கை அனாயசமாக பேசி இருக்கிறார்.  இந்தப் படத்தில் எது தேவையோ, அதை மட்டுமே வைத்து ஒரே ஒரு பாடலை எழுதி இருக்கிறேன். அந்தப் பாடல் அனைவராலும் ரசிக்கப்படும் என நம்புகிறேன். அத்துடன் கமர்ஷியலான பாடல் ஒன்றையும் எழுதி இருக்கிறேன்.  

 

திரையுலகில் அனைவருக்கும் மாற்று இருக்கிறது. ஆனால் கவுண்டமணிக்கு மட்டும் மாற்று இல்லை. ஒரே ஒரு கவுண்டமணி தான். ஒரே ஒரு ஜாம்பவான் தான். அவருடைய இடத்தை யாராலும் நிரப்ப இயலாது. ஏனெனில் அவர் திட்டினால் மட்டும்தான் யாருக்கும் கோபம் வராது. அவர் அனைவருக்கும் பிடித்த கலைஞர். அவரைக் கொண்டாட வேண்டிய காலகட்டம் இது,” என்றார்.

தயாரிப்பாளர் கே ராஜன் பேசுகையில், ”கவுண்டமணி நாடகத்தில் நடித்த போதே அவருடைய நடிப்பை ரசித்தவன் நான். சென்னையில் உள்ள பழைய கலைவாணர் அரங்கத்தில் அவருடைய நாடகங்கள் தொடர்ந்து நடைபெறும். அவருடைய உடல் மொழி, வசன உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக இருக்கும்.  அதன் பிறகு அவரை நான் ’16 வயதினிலே’ படத்தில் பார்த்தேன்.  மக்களை மகிழ்விக்கின்ற புண்ணியமான காரியத்தை செய்கின்ற அவர் ஒரு அற்புதமான மாமனிதர்.  

 

நானும், ஐசரி வேலனும் ஒரு முறை ஈரோடுக்கு அருகே உள்ள கருங்கல்பாளையம் என்ற ஊருக்கு சென்றோம். அங்கு கவுண்டமணியின் ரசிகர்கள் இரவு 11 மணி அளவில் மீனை பிடித்து வறுத்து உணவருந்த வழங்கினார்கள். அவரை நான் சில நாட்கள் தான் சந்தித்து இருக்கிறேன். ஆனால் அவை அனைத்தும் பொன்னான நாட்கள்.

கவுண்டமணி நடிக்க வந்த பிறகு தமிழ் திரையுலகம் பொற்காலமாக இருந்தது. தயாரிப்பாளர்களுக்கு எல்லாம் பொற்காலம்.‌ இயக்குநர் கே. பாக்கியராஜ், இயக்குநர் பி. வாசு ஆகியோரின் ஆளுமையில் திரையுலகம் இருந்தது. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக இருந்தார்கள். கவுண்டமணிக்காக ஓடிய படங்கள் ஏராளம். அவரை நம்பிய எந்த தயாரிப்பாளரும் கெட்டுப் போனதில்லை. காலம் தவறாது படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தயாரிப்பாளருக்காக கடுமையாக உழைத்தவர். 

 

இயக்குநர் சாய் ராஜகோபால் பல படங்களுக்கு நகைச்சுவை காட்சிகளை எழுதியிருக்கிறார். அவர் இன்று இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த ‘ஒத்த ஓட்டு முத்தையா’ ஒத்த ஓட்டை வாங்குகிறாரோ இல்லையோ ஒட்டுமொத்த தமிழக மக்களின் உள்ளத்தை கவர்வார். அனைவரும் இந்த திரைப்படத்தை பார்ப்பார்கள். ஏனெனில் மக்கள் மன அழுத்தத்துடன் இருக்கிறார்கள்.

தற்போது வெளியாகும் பல படங்கள் தோல்வி அடைகின்றன. சில படங்கள் வெற்றி பெறுகின்றன.  ஒரு காலத்தில் அனைவரது வீட்டிலும் கவுண்டமணி இருந்தார். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாததால் தொலைக்காட்சியில் கவுண்டமணி நடித்த திரைப்படங்கள் தான் ஆறுதலாக இருந்தன. அவர் என்றென்றும் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பார்,” என்றார். 

 

இயக்குநர் சாய் ராஜகோபால் பேசுகையில், ”ஒத்த ஓட்டு முத்தையா படத்தை வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி. இந்தத் திரைப்படத்தில் 35 நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் என் மீது வைத்திருக்கும் அன்பின் காரணமாக குறைவான ஊதியத்தை பெற்றுக் கொண்டு நடித்தார்கள். அவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படம் உருவான விதம் ஆச்சரியமானது. அதனை உங்களிடத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.  நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் நடிப்பில் தயாராகும் ‘தேவர் ஹோட்டல்’ என்ற படத்திற்கான