*சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு*
*
‘வெங்காயம்’, ‘பயாஸ்கோப்’ ஆகிய படங்களை இயக்கி, தயாரித்து, நடித்து, பிரபலமான பன்முகத் திறன் கொண்ட படைப்பாளியாகத் திகழும் சங்ககிரி ராஜ்குமார், கதையின் நாயகனாகவும் பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்திருக்கும் ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் வகையிலான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.*
இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் கதையின் நாயகனாக மட்டுமல்லாமல், ஒரு திரைப்படத்தின் உருவாக்கத்திற்குத் தேவையான பல்வேறு பணிகளைத் தனி ஒருவராக மேற்கொண்டு, உலக சினிமாவில் இதுவரை யாரும் மேற்கொள்ளாத வகையிலான ஒரு முயற்சியாக இப்படத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் தனித்துவமான சாதனையை நிகழ்த்திய தமிழர் என்ற அடையாளத்தையும் அவர் பெற்றுள்ளார்.
எதிர்வரும் 21-ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘ONE MAN’ திரைப்படத்தை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர்கள் சேரன், லெனின் பாரதி, ஏ.ஆர்.கே. ராஜராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் சங்ககிரி ராஜ்குமார் பேசுகையில்:
“இந்தப் படத்தின் அனைத்து பணிகளையும் நிறைவு செய்த பிறகு, திரையரங்குகளில் படத்தை வெளியிட வேண்டும் என்பதற்காக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணுவைச் சந்தித்தேன். இதுபோன்ற உலக சாதனை முயற்சியாக உருவாகியுள்ள படைப்பைத் திரையரங்குகளில் வெளியிடுவதற்கான வழிகாட்டலையும் ஆலோசனையையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அவர் உடனடியாக பிவிஆர் நிறுவனத்திடம் தொடர்புகொண்டு பேசினார்.
பிவிஆர் நிறுவனத்திடம், ‘இந்தப் படைப்பு ரசிகர்களைச் சென்றடைய வேண்டும்’ என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அவர்கள், ‘உலகில் யாரும் இதுபோன்ற முயற்சியை மேற்கொண்டதில்லை. தமிழ்நாட்டில் தமிழராகிய நீங்கள் இந்த முயற்சியை மேற்கொண்டிருக்கிறீர்கள். இதற்கு எங்களின் ஆதரவு உண்டு’ என்றனர். இதற்காக பிவிஆர் நிறுவனத்திற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்தத் திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடுவதற்காக முயற்சி செய்தால், ‘இப்படி ஒரு அரிய முயற்சியா!’ என்ற வியப்புடன் ஆதரவு அளிப்பார்கள்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துவிட்டு, படப்பிடிப்புக்குப் பிந்தைய தொழில்நுட்பப் பணிகளுக்காக இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜாவைச் சந்தித்தேன். அவர் என்னுடைய நோக்கத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, தன்னுடைய ஸ்டுடியோவின் சாவியை ஒப்படைத்துவிட்டு, ‘நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் இங்கு பணியாற்றலாம்’ என்று தெரிவித்தார். அவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா பேசுகையில்:
“ஒரு மனிதன் எல்லா வேலைகளையும் செய்து, அவரே எல்லா கதாபாத்திரங்களிலும் நடித்து ஒரு படத்தை உருவாக்குகிறேன் என்று சொல்லும்போது, மற்றவர்களைப் போல எனக்குள்ளும் ஒரு கேள்விக்குறி இருந்தது.
ஆனால், அவர் பணியாற்றிய விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் முன்பு குறிப்பிட்டதைப் போல், இதற்கு ஆதாரம் இருக்கிறது என்று சொன்னார் அல்லவா? அதில் நானும் ஓர் ஆதாரம் தான். படப்பிடிப்புக்குப் பிந்தைய பணிகள் அனைத்தையும் அவரே மேற்கொண்டார்.
அதன் பிறகு அந்தப் படத்தைப் பார்த்தேன். ஒரு திரைப்படத்தைத் தொழில்நுட்ப ரீதியாக எவ்வாறு சிறந்த தரத்துடன் உருவாக்க வேண்டுமோ, அப்படியே அந்தப் படத்தை அவர் உருவாக்கியிருந்தார். இந்தத் திரைப்படத்தில் ஆயிரக்கணக்கான மனிதர்களின் கதாபாத்திரங்களில் அவரே நடித்திருக்கிறார். இதுவே அவருடைய முதல் வெற்றி.
இந்தத் திரைப்படத்தை நான், இயக்குநர் லெனின் பாரதி, சுப்பிரமணிய சிவா ஆகியோர் பார்த்தோம். இந்தப் படத்தைப் பார்த்த பிறகு எங்களுக்கு ஏற்பட்ட ஆச்சரியத்தில் சுமார் பத்து நிமிடங்கள் எங்களால் பேசவே முடியவில்லை.
இது இந்தியத் திறமையின் உச்சம் என்று சொல்லலாம். அவருடைய உழைப்பு பெருமைப்படக்கூடியது. இது ஒரு வரலாற்றுப் பதிவு.
இந்தத் திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இயக்குநர் லெனின் பாரதி பேசுகையில்:
“தமிழ் சினிமாவிற்கு இது மிக முக்கியமான படம். இதற்கு முன்பு ஏராளமான பிரம்மாண்டமான படங்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, இந்திய சினிமாவில் தொழில்நுட்ப ரீதியாக ஒரு மைல்கல்லை எட்டிய திரைப்படம் இது. உயர்ந்த தொழில்நுட்பத் தரத்துடன் நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. ஆனால், அவற்றின் பின்னணியில் ஆயிரக்கணக்கான தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு இடம்பெற்றிருக்கும். தொழில்நுட்ப வல்லுநர்களின் பங்களிப்பு, பெரிய நிறுவனங்களின் பங்களிப்பு, மிகப்பெரிய பொருளாதார பங்களிப்பு என பல்வேறு அம்சங்கள் இருக்கும்.
ஆனால், இத்தகைய பெரிய பின்னணி எதுவும் இல்லாமல், தனி மனிதராக மிகப்பெரிய முயற்சியை மேற்கொண்டு சங்ககிரி ராஜ்குமார் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். இதன் காரணமாகவே அவருடன் தொடர்ந்து பயணிக்கிறேன்.
இது சினிமாவை காட்டுத்தனமாக நேசிக்கும் ஒருவரால் மட்டுமே சாத்தியமாகும். சினிமாவை மட்டுமல்லாமல், சினிமா மூலமாக ஏதாவது ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும் என்ற ஆதங்கம் கொண்ட கலைஞர் சங்ககிரி ராஜ்குமார். அதற்காகவும் நான் அவருடன் இணைந்திருக்கிறேன்.
இந்தப் படத்தைப் பார்க்கும்போது, ஒரு நபரால் இவ்வளவு விஷயங்களைச் செய்ய முடியுமா என்ற ஆச்சரியம் ஏற்படும். சினிமாவை நேசிக்கும் அனைத்து கலைஞர்களும் இந்தத் திரைப்படத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பது என்னுடைய வேண்டுகோள்.
தோழர் ராஜ்குமார் மிக நுட்பமான நடிகர். தெருக்கூத்து கலைஞரும் கூட. அவருடைய தெருக்கூத்தை நான் பார்த்திருக்கிறேன். தமிழ் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்பட வேண்டிய நடிகர் இவர்.
இந்தத் திரைப்படத்தை தமிழ்நாடு திரைப்படக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு திரையிட்டுக் காண்பிக்க வேண்டும். தொழில்நுட்பத்தை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்பது குறித்து சங்ககிரி ராஜ்குமார் திரைப்படக் கல்லூரி மாணவர்களுடன் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். இதை மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். இதற்கும் தமிழக அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கிறேன்” என்றார்.
இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் பேசுகையில்:
“ஒரு நாள் ரோகிணி மேடம் போன் செய்து, ‘வெங்காயம்’ என்றொரு படத்தைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. நீங்களும் பாருங்கள் என்றார். அவருடைய பரிந்துரை என்றால் நிச்சயமாக நன்றாகத்தான் இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தைப் பார்த்தேன். நல்ல விஷயத்தை அழுத்தமாகவும் இயல்பாகவும் சொல்லியிருந்தார்.
ஒரு நல்ல படத்தைப் பார்த்துவிட்டால், அது தொடர்பான உணர்வுகளைப் பதிவிடுவதுதான் என்னுடைய வழக்கம்.
அந்தத் தருணத்தில் என்னை ஏராளமானவர்கள் தூக்கிச் சுமந்ததைப் போல், எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்த தருணத்தில் ராஜ்குமாரைத் தோளில் தூக்கிச் சுமக்கத் தொடங்கினேன். அதன் பிறகு என்னுடைய அழைப்பின் பேரில் 50-க்கும் மேற்பட்ட இயக்குநர்கள் இந்தப் படத்தைப் பார்வையிட்டனர். அதன் பிறகு அந்தப் படத்திற்கு ஒரு அடையாளம் கிடைத்தது.
திரையரங்குகளில் வெளியாகி ஓரிரு நாட்களிலேயே வெளியேற்றப்பட்ட ‘வெங்காயம்’ திரைப்படம், மீண்டும் ‘சேரன் வழங்கும் வெங்காயம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்றது. நல்ல வசூலையும் பெற்றது.
இவர் சினிமாவில் சம்பாதிப்பதற்காக வரவில்லை. சாமானியனும் ஒரு சினிமாவை உருவாக்க முடியும். சாமானியர்களிடம் சினிமாவைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். சாமானியர்களையும் சினிமாவில் பயன்படுத்த முடியும் என்ற கர்வம் மிக்க சிந்தனை அவருக்கு உண்டு.
அவருடைய அடுத்த படமான ‘பயாஸ்கோப்’, ‘வெங்காயம்’ திரைப்படத்தை உருவாக்கும்போது கிடைத்த அனுபவங்களை வைத்து எடுக்கப்பட்ட படம். அவரிடம் மிகச் சிறந்த நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அது அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்டிருக்கும்.
இதுபோன்ற நல்ல திரைப்படங்களை மக்களிடம் நாம் தான் முன்னிறுத்த வேண்டும். அதிலும் இந்த ‘ONE MAN’ திரைப்படத்தில் அனைத்து விஷயங்களையும் அவர் மட்டுமே செய்திருக்கிறார். இத்தகைய புதுமையான முயற்சிக்காகவே அவரை நாம் அனைவரும் பாராட்ட வேண்டும். ஆனால் அந்தப் புதுமையான முயற்சியையும் அவர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
இந்தப் படத்தை நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பார்த்துவிட்டேன். அதன் பிறகு பல்வேறு தொழில்நுட்பப் பணிகளை மேற்கொண்டு படத்தை மேலும் சிறப்பாகச் செதுக்கியிருக்கிறார்.
படத்தில் அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே நடித்திருக்கிறார். ஆனால் அவற்றில் ராஜ்குமார் தெரியமாட்டார்; அந்தக் கதாபாத்திரம்தான் தெரியும். அந்த அளவிற்குக் கடுமையாக உழைத்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் உழைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.
அவருடைய கடும் உழைப்புதான் அவரை அடையாளப்படுத்தும். அவர் ‘நெடும்பா’ என்றொரு படத்தையும் உருவாக்கியிருக்கிறார். அந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.
சங்ககிரி ராஜ்குமாருக்கு ஒரு படத்தை உருவாக்க ரூ.70 லட்சம் போதுமானது. இந்தப் பட்ஜெட்டில் தமிழ் சினிமாவில் நல்லதொரு படத்தை எடுக்க முடியும் என்பதை ராஜ்குமார் நிரூபித்திருக்கிறார்; நிரூபித்தும் வருகிறார்.
தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் திரைப்படங்களாகவே சங்ககிரி ராஜ்குமார் உருவாக்கும் திரைப்படங்கள் இருக்கின்றன. இருப்பினும், இன்றைய சூழலில் அவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றாலும், பத்து அல்லது பதினைந்து ஆண்டுகள் கழித்து அவருடைய புகழையும் அவரையும் தமிழ் சினிமா கொண்டாடும். அவருக்கு நிச்சயமாக அங்கீகாரம் கிடைக்கும்.
அவர் சினிமா மீது வைத்திருக்கும் நேசத்தால், சினிமா ஒரு நாள் அவரைக் கொண்டாடியே தீரும்” என்றார்.
நடிகர் சத்யராஜ் பேசுகையில்:
“சங்ககிரி ராஜ்குமாருடன் இணைந்து பணியாற்றியதற்கு முக்கியமான காரணம் பகுத்தறிவுப் பகலவன் பெரியார் தான். ஏனெனில், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கோவை ராமகிருஷ்ணன் போன் செய்து இவரைச் சந்திக்கச் சொன்னார். அவர் சொல்லும்போது, ‘அய்யாவின் தொண்டர். அவருக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள்’ என்று கேட்டுக்கொண்டார்.
அவரைச் சந்தித்தபோது, ‘நீங்கள் சத்யராஜாகவே நடிக்க வேண்டும். ஒரு பாடலில் மட்டும் பெரியாராக நடிக்க வேண்டும்’ என்றார்.
கடந்த 20 ஆண்டுகளாக கேரக்டர் ரோலில் நடிக்கத் தொடங்கிய பிறகு, என்னுடைய கதாபாத்திரத்தை மட்டுமே கேட்கிறேன். இயக்குநர் சொல்வதை மட்டும் செய்கிறேன். என்னுடைய கதாபாத்திரம் தவறில்லாமல் இருந்தால் போதும் என்று நினைத்துவிட்டு நடிக்கிறேன்.
‘வால்டர் வெற்றிவேல்’, ‘அமைதிப்படை’ காலகட்டத்தில் சினிமா என் கையில் இருந்தது. இப்போது நான் சினிமாவின் கையில் இருக்கிறேன். அதனால் தற்போது படப்பிடிப்புக்குச் சென்றோமா, நடித்தோமா என்று இருக்கிறேன்.
அதே சமயத்தில், நான் நடிக்காத படங்களின் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கும் செல்வதில்லை. ஏனெனில், நான் நடிக்கும் படங்கள் மாதந்தோறும் வெளியாகின்றன. கடந்த மாதம் ‘சாருகேசி’. இந்த மாதம் ‘ஜி.டி.என்.’. அடுத்த மாதம் ‘மண்டாடி’.
நாம் நடித்த படங்களைப் பற்றிய விமர்சனம் நமக்குள் இருந்தாலும், அதை பகிரங்கமாக மேடையில் பகிர்ந்துகொள்வதில்லை. படத்தைப் பற்றி புகழ்ந்துதான் பேச வேண்டும். என்னிடம் இருக்கும் மிகப்பெரிய ‘மிஸ்டேக்’ என்னவென்றால், இரண்டு ‘பால்’ கூடுதலாகவே போடுவேன். ஏனெனில் கலைஞர்களின் சந்தோஷம் அங்கீகாரம் தான். பாராட்டிற்காக ஏங்குவது மனித இயல்பு. அதனால் தான் புகழ்ந்து பேசுகிறேன்.
இதைப் பற்றிப் பேசும்போது மணிவண்ணன் அடிக்கடி என்னிடம் ஒரு விஷயத்தைச் சொல்வதுண்டு. ‘தலைவரே, ஐஸ் வைக்கிறது என்றால் சின்னதாக வைக்கக் கூடாது. பெரிய அளவில் ஐஸ் வைத்துவிட வேண்டும். ஒன்று அவரது மண்டை உடைய வேண்டும் அல்லது ஐஸ் உடைய வேண்டும். அந்த அளவிற்கு ஐஸ் வைக்க வேண்டும்’ என்பார்.
ஆனால், நான் இந்தப் படத்திற்கு ஏன் வந்தேன் என்றால், ‘வெங்காயம்’ படத்தைப் பார்த்து பிரமித்துப் போனேன். ‘வெங்காயம்’ படத்தை மீண்டும் வெளியிட்டு வெற்றி பெறச் செய்ததில் சேரனின் பங்களிப்பு அதிகம். அதற்காக இந்தத் தருணத்தில் அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அவருடைய ‘பயாஸ்கோப்’ படத்தையும் பார்த்து பிரமித்தேன். அந்தப் படமும் சிறப்பானதாக இருந்தது. இந்தப் படத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இன்றும் குழப்பத்தில் இருக்கிறேன். ‘ONE MAN’ என்றால் எப்படி? எல்லா வேலைகளையும் இவரே செய்கிறார் என்றால் அது எப்படி சாத்தியமானது? எனக்கு தற்போது வரை புரியவில்லை.
125 படங்களில் நடித்த பிறகு ‘வில்லாதி வில்லன்’ என்ற ஒரு படத்தை இயக்கினேன். அப்போதுதான் நடிப்பது எவ்வளவு சுகமானது என்பதை உணர்ந்தேன்.
ஊடகங்களிடம் நான் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். சங்ககிரி ராஜ்குமாரின் ‘ONE MAN’ திரைப்படம் மக்களைச் சென்றடைவதற்கு பேருதவி செய்யுங்கள். ஏனெனில், இந்தத் திரைப்படத்தை நான் மிகப்பெரும் சாதனையாகப் பார்க்கிறேன்.
இவர் வெற்றி பெற்றால்தான் இவரைப் போன்ற புதிய முயற்சிகளுடன் ஏராளமான இளைஞர்கள் தமிழ் சினிமாவிற்கு கிடைப்பார்கள். இந்தப் படத்தை நான் பார்த்த பிறகு ராஜ்குமாருக்கு போன் செய்து என்னுடைய விமர்சனத்தைச் சொல்வேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
இதனைத் தொடர்ந்து பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்களுக்காக ‘ONE MAN’ திரைப்படம் திரையிடப்பட்டது.
திரைப்படத்தைப் பார்த்த பின்னர், பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் அனைவரும் சங்ககிரி ராஜ்குமார் அவர்களை வெகுவாகப் பாராட்டி, அவரின் முயற்சியை கொண்டாடினர்.

