விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் வகையில் தமிழக அரசு ‘விழித்திரை காப்போம்’ திட்டம்
இந்தியாவிலேயே முதன்முறையாக விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, பார்வை இழப்பைத் தடுக்க உதவும் முன்னோடித் திட்டம்
சென்னை, செப்டம்பர் 18, 2026:
தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படவுள்ள ‘விழித்திரை காப்போம்’ (VKT) திட்டத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, இன்று சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் உள்ள மண்டல கண் மருத்துவக் கழகத்தில் நடைபெற்றது.
சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் கண் மருத்துவத் துறை தலைவர்களின் ஒருங்கிணைப்புடன், எம்.எம்.எம். கண் மருத்துவமனைகள் ஏற்பாட்டில், அப்பாசாமி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் ஆதரவுடன் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு, மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை மாண்புமிகு அமைச்சர் டாக்டர் கே.ஜி. அருண்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் டாரெஷ் அகமது, ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டத்தின் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ். சுப்பிரமணி, ஐ.ஏ.எஸ்., மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் டாக்டர் வி. லோகநாயகி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முதல்வர் டாக்டர் கே. சாந்தாராம் ஆகியோருடன், மூத்த கண் மருத்துவர்கள், கல்வியாளர்கள் மற்றும் சுகாதாரத் துறை வல்லுநர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய மாண்புமிகு அமைச்சர், சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் மேம்பட்ட மருத்துவ சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை எடுத்துரைத்தார். குறிப்பாக, சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் முக்கியத்துவமும் வலியுறுத்தப்பட்டது.
சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக விழித்திரை பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம். இந்தியாவில் மட்டும் சுமார் 10.1 கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 13.6 கோடி பேர் சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஏழு பேரில் ஒருவருக்கு விழித்திரை பாதிப்பு ஏற்படுகிறது.
கிராமப்புறங்களில் சர்க்கரை நோயின் பாதிப்பு சுமார் 19.8% முதல் 22.5% வரையிலும், நகர்ப்புறங்களில் சுமார் 32% ஆகவும் உள்ளது.
‘விழித்திரை காப்போம்’ திட்டத்தின் மூலம், விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய சிகிச்சையை வழங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் பார்வை இழப்பைத் தடுக்க உதவ முடியும்.
ஆரம்ப நிலையிலேயே விழித்திரை பாதிப்பைக் கண்டறிய சிறப்பு பரிசோதனை
மண்டல கண் மருத்துவக் கழக இயக்குநர் டாக்டர் விநாயக் மூர்த்தி கூறியதாவது:
“சர்க்கரை நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்துடன் தொடர்புடைய விழித்திரை பாதிப்புகள், ஆரம்ப கட்டங்களில் வெளிப்படையான அறிகுறிகள் இல்லாமலேயே தீவிரமடையக்கூடும். பரிசோதனை மற்றும் பரிந்துரை முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் விழித்திரையில் ஏற்படும் மாற்றங்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோயாளிகள் உரிய நேரத்தில் சிறப்பு மருத்துவ சிகிச்சையைப் பெறுவதை உறுதி செய்ய முடியும். சமூக அளவில் கட்டமைக்கப்பட்ட விழித்திரை பரிசோதனை மற்றும் சிகிச்சையை கொண்டு சேர்ப்பதில் ‘விழித்திரை காப்போம்’ திட்டம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும்.”
ஆரம்ப சுகாதார நிலையங்கள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை விழித்திரை பரிசோதனை
விழித்திரை காப்போம்’ திட்டம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் வட்டார மருத்துவமனைகள் முதல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் வரை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு விழித்திரை பரிசோதனை மேற்கொள்ள லேசர் அடிப்படையிலான தொழில்நுட்பம் உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும்.
சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் விழித்திரை பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், இத்திட்டம் விரிவான செயல்பாட்டு கட்டமைப்பாகவும் விரிவுபடுத்தப்படும்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பார்வை மையங்களில், விழித்திரை பரிசோதனை மற்றும் பாதிப்புகளைக் கண்டறிவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
வட்டார மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் உள்ள பரிந்துரை மையங்களில், விழித்திரை பரிசோதனை அறிக்கைகள் கண் மருத்துவ நிபுணர்களால் பரிசீலிக்கப்படும். தேவையான நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்படுவதுடன், தேவைக்கேற்ப நவீன சிகிச்சை முறைகளும் மேற்கொள்ளப்படும்.
மண்டல கண் மருத்துவக் கழகத்தின் விழித்திரை சிகிச்சைப் பிரிவு தலைவர் டாக்டர் ராஜ்ஷேகர் கூறியதாவது:
“விழித்திரை காப்போம் திட்டத்தின் முக்கிய பலம், விழித்திரை பாதிப்புகளைப் பரிசோதனை மூலம் கண்டறிவதில் இருந்து, சிறப்பு மருத்துவ மதிப்பீடு மற்றும் சிகிச்சை வரை தெளிவான ஒரு தொடர் செயல்முறையை உருவாக்குவதில்தான் உள்ளது. பல்வேறு நிலைகளில் உள்ள மருத்துவ வசதிகள் மற்றும் பரிந்துரை மையங்கள் வலுப்படுத்தப்படுவதன் மூலம், மேம்பட்ட விழித்திரை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை உரிய கட்டத்திலேயே கண்டறிந்து, அவர்களைத் தேவையான சிகிச்சைக்காக பரிந்துரைக்க இந்த முன்னெடுப்பு உதவும்.”
மேம்பட்ட விழித்திரை பரிசோதனை மற்றும் சிகிச்சை
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில், ஒளியியல் ஒத்திசைவு வரைவியல் (OCT – Optical Coherence Tomography) மற்றும் விழித்தள ஒளிர்மப் பொருள் நிறமாலை வரைவியல் (FFA – Fundus Fluorescein Angiography) உள்ளிட்ட நவீன உபகரணங்களின் மூலம் விழித்திரை பரிசோதனை மேலும் வலுப்படுத்தப்படும்.
லேசர் சிகிச்சை மற்றும் ஊசி மூலம் வழங்கப்படும் சிகிச்சைகள் உள்ளிட்ட சிகிச்சை முறைகள், விழித்திரை மருத்துவ நிபுணர்களால் வழங்கப்படும்.
ஒன்பது மண்டல மையங்களில் மேம்பட்ட விழித்திரை அறுவைச் சிகிச்சை வசதிகள்
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அமைந்துள்ள ஒன்பது மண்டல மையங்களில் மேம்பட்ட விழித்திரை அறுவைச் சிகிச்சை வசதிகள் வலுப்படுத்தப்படும்.
அந்த மையங்கள்:
சென்னை, வேலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, சேலம், கோயம்புத்தூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி.
இந்த மையங்களில் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், கண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி மற்றும் முதுநிலைப் பயிற்சிகளும் வழங்கப்பட்டு, விழித்திரை சிகிச்சை சேவைகள் மேலும் வலுப்படுத்தப்படும்.
அரசு கண் மருத்துவமனை, எழும்பூர் – பரிந்துரை மற்றும் உச்சநிலைப் பயிற்சி மையமாக செயல்படும்
சென்னை எழும்பூரில் உள்ள அரசு கண் மருத்துவமனை, ‘விழித்திரை காப்போம்’ திட்டத்தின் கீழ் மேம்பட்ட சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கான முதன்மை பரிந்துரை மையமாக செயல்படும்.
மேலும், மேம்பட்ட சிகிச்சை மற்றும் பயிற்சிக்கான உச்சநிலைப் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையமாகவும் இம்மருத்துவமனை செயல்படும்.
எம்.எம்.எம். கண் மருத்துவமனைகளின் இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் எஸ். பெர்னார்ட் கூறியதாவது:
“விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை வலுப்படுத்துவதில் விழித்திரை காப்போம் திட்டம் ஒரு முக்கியமான முன்னெடுப்பாகும். பரிசோதனை, பரிந்துரை, சிறப்பு மருத்துவ சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை ஒரு கட்டமைக்கப்பட்ட முறையில் இந்தத் திட்டம் ஒருங்கிணைக்கிறது. இந்த முக்கியமான முன்னோட்ட நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து நடத்துவதற்கும், விழித்திரை சிகிச்சையை வலுப்படுத்தி, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த முன்னெடுப்பில் பங்களிப்பதற்கும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.”
இந்தத் திட்டத்தைத் திறம்பட செயல்படுத்த தமிழ்நாடு அரசு முழுமையாகத் தயாராக உள்ளது.
தமிழ்நாட்டில் முதன்முறையாகவும், இந்தியாவிலேயே முதன்முறையாகவும் இந்த விழித்திரை சிகிச்சை முன்னெடுப்பு தொடங்கப்படுவதால், இத்திட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைகிறது. மேலும், இது ஒரு முன்னோடித் திட்டமாகத் திகழும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுமக்களிடையே விழித்திரை பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தேவையான சிகிச்சையை வழங்குவதற்கான வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம், இந்தத் திட்டம் இந்தியாவின் மருத்துவம் மற்றும் சுகாதார உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பங்களிக்கும்.

